பாசுரம்:
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்.
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.
பதவுரை:
நோற்று – நோன்பு நோற்று
சுவர்க்கம் புகுகின்ற- ஸுகத்தை இடைவிடாமல் அனுபவிக்கின்ற,
அம்மனாய்- அம்மா!
வாசல் திறவாதார்-வாசற்கதவைத் திறக்கமாட்டாதவர்கள்
மாற்றமும் தாராரோ-ஒரு பதில் வார்த்தையாவது பேசாரோ?
நாற்றத் துழாய் முடி-வாசனை வீசுகின்ற திருத்துழாய் மாலையை முடியிலே சூடியுள்ளவனும்
நாராயணன் – நாராயணன் என்னும் ஒப்பற்ற திருநாமத்தை உடையவனும்
நம்மால் போற்ற பறைதரும்-நம்மால் பல்லாண்டு பாடப்பெற்று நமக்கு ப்ராப்யமான கைங்கர்யத்தைக் கொடுப்பவனும்
புண்ணியனால்-தர்மமே வடிவெடுத்தவனுமான எம்பெருமானால்
பண்டு ஒரு நாள்- முன்னொரு காலத்தில்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த-யமன் வாயில் விழுந்தொழிந்த
கும்பகரணனும் – கும்பகர்ணனும்
உனக்கே தோற்று-உனக்குத் தோல்வியடைந்து
பெரும் துயில் தான்- (தன்) பெருந்தூக்கத்தை.
தந்தானோ-உனக்குக் கொடுத்துப்
போயினனோ?
ஆற்ற அனந்தல் உடையாய்- அழகிய உறக்கத்தை உடையவளே!
அரும் கலமே – அடையவரிய ஆபரணம் போன்றவளே!
தேற்றமாய் வந்து திற – தெளிந்து வந்து (கதவைத்) திறப்பாயாக.