திருப்பாவை பாசுரம் 13 பதவுரை

பாசுரம்:

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லாவரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று

புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே

பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால்

கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.

பதவுரை:

புள்ளின் வாய் கீண்டானை- பறவையுருவங்கொண்டு வந்த பகாஸுரனுடைய வாயைக் கிழித்தெறிந்தவனும்

பொல்லா அரக்கனை கிள்ளிகளைந்தானை-பொல்லாங்கு

களுக்கு உறைவிடமான இராவணனை விளையாட்டாக அழித்தவனுமான எம்பிரானுடைய

கீர்த்திமை பாடி போய்-வீரச்செயல்களைப் பாடிக்கொண்டு சென்று

பிள்ளைகள் எல்லாரும் – எல்லாப் பெண்பிள்ளைகளும் 

பாவைக்களம்- (க்ருஷ்ணனும் தாங்களும்) நோன்பு நோற்கைக்காகக் குறித்த இடத்திற்கு

புக்கார்-புகுந்தனர்

வெள்ளிஎழுந்து-சுக்கிரன் மேலெழுந்து

வியாழம் உறங்கிற்று – குரு அஸ்தமித்தது

(மேலும்,) 

புள்ளும் சிலம்பின காண் – பறவைகளும் (இறைதேடக்) கூவிச்செல்கின்றன

போது அரி கண்ணினாய்-பூவையும் மானையும் ஒத்துள்ள கண்ணையுடையவளே!

பாவாய்- இயற்கையாகவே ஸ்த்ரீத்வத்தைப் பெற்றவளே!

நீ -நீ

நல்நாள் – கிருஷ்ணனும் நாமும் கூடப்போகும் இந்த நல்லநாளில்

கள்ளம் தவிர்ந்து- (கிருஷ்ண குணங்களைத் தனியிருந்து அநுபவிக்கையாகிற) கபடத்தை விட்டு

கலந்து— (எங்களோடு) சேர்ந்து

குள்ளக் குளிர குடைந்து நீராடாதே- மிகக் குளிர்ச்சியாயிருக்கும் நீரில் நன்றாக நீராடாமல்

பள்ளி கிடத்தியோ-படுக்கையில் கிடந்து உறங்குகின்றாயோ?

ஆல்-ஆச்சரியம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top