பாசுரம்:
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதா யறிவுறாய்
அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த
உம்பர்கோமானே உறங்கா தெழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.
பதவுரை:
அம்பரமே – வஸ்திரங்களையும்
தண்ணீரே-ஜலத்தையும்
சோறே- சோற்றையுமே
அறம் செய்யும்- தர்மம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா-எம் ஸ்வாமியான நந்தகோபரே!
எழுந்திராய் – எழுந்திருக்கவேணும்
கொம்பு அனார்க்கெல்லாம்-வஞ்சிக்கொம்புபோன்ற பெண்களுக்கெல்லாம்.
கொழுந்தே – மேலாயிருப்பவளே!
குலம்விளக்கே – ஆயர்குலத்துக்கு மங்கள தீபமாயுள்ளவளே!
எம்பெருமாட்டி-எமக்குத் தலைவியாயிருப்பவளே!
அசோதாய்-
யசோதைப்பிராட்டியே!
அறிவுறாய் – உணர்ந்தெழுவாயாக
அம்பரம் ஊடு அறுத்து – ஆகாசவெளியைத் துளைத்துக்
கொண்டு,
ஓங்கி-உயர்ந்து,
உலகு அளந்த – ஸகல லோகங்களையும் அளந்தருளிய
உம்பர் கோமானே – தேவதேவனே!
உறங்காது- கண்வளர்ந்தருளாமல் எழுந்திராய் எழுந்திருக்க வேணும்;
செம் பொன் கழல் அடி- சிவந்த பொன்னால் செய்த வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையுடைய
செல்வா- ஸ்ரீமானே!
பலதேவா – பலதேவனே!
உம்பியும் நீயும்- உன் தம்பியாகிய கண்ணனும் நீயும்
உறங்கேல் – தூங்கா தொழியவேணும்.