பாசுரம்:
உந்து மதகளிற்ற னோடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தங் கமழும் குழலீ கடைதிறவாய்
வந்தெங்குங் கோழி யழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
பதவுரை:
மதம் உந்து களிற்றன்- மதஜலத்தைப் பெருக விடுகின்ற யானை போல பலமுள்ளவராய்
ஓடாத தோள் வலியன் — (யுத்த பூமியில்) பின் வாங்கவேண்டாத தோள் வலியை உடையவரான
நந்த கோபாலன் – ஸ்ரீநந்தகோபருடைய
மருமகளே – மருமகளே!
நப்பின்னாய்-நப்பின்னை என்னும் பெயரை உடையவளே!
கந்தம் கமழும் குழலீ-பரிமளம் வீசும்படியான கூந்தலை உடையவளே!
கடை திறவாய்-வாயிலைத் திறப்பாயாக
கோழி-கோழிகள்
எங்கும் வந்து-நாற் புறங்களிலும் பரவி
அழைத்தன காண்- கூவினகாண்!
மாதவி பந்தல் மேல்– குருக்கத்திக்
கொடிகளாலான பந்தல்மேல் (உறங்கும்)
குயில் இனங்கள்- குயில் கூட்டங்கள்
பல் கால்-பலதடவைகள்
கூவினகாண்- கூவாநின்றனகாண்
பந்து ஆர் விரலி—(கண்ணனை பந்துவிளையாட்டில் தோற்பிக்கைக்கு உபகரணமாயிருந்த)
விளங்கும் விரல்களையுடையவளே!
உன் மைத்துனன் பேர் பாட- உன் நாதனாகிய கண்ணபிரானுடைய நாமங்களை (நாங்கள்) பாடும்படியாக
சீர் ஆர் வளை ஒலிப்ப – சீர்மைபொருந்திய (உன்) கைவளைகள் ஒலிக்கும்படி
வந்து-நடந்துவந்து
செம் தாமரை கையால்-சிவந்த தாமரைபோன்ற உன் திருக்கையால்
மகிழ்ந்து திறவாய்-மகிழ்ச்சியுடன் கதவைத் திறப்பாயாக.