பாசுரம்:
ஒருத்தி மகனாய்ப் பிறந்தோ ரிரவில்
ஒருத்தி மகனா யொளித்து வளரத்
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே யுன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமுஞ் சேவகமும் யாம்பாடி
வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
பதவுரை:
ஒருத்தி-தேவகிப் பிராட்டியாகிற ஒருத்திக்கு
மகன் ஆய்-பிள்ளையாய்
பிறந்து-தோன்றி
ஓர் இரவில்- (அவதரித்த அந்த) ஒப்பற்ற இரவிலேயே
ஒருத்தி-யசோதைப் பிராட்டியாகிய ஒருத்தியுடைய
மகன் ஆய்—பிள்ளையாக ஆகி
ஒளித் துவளர-ஒளிந்திருந்து வளரும் காலத்தில்
தான்–கம்ஸனாகிறவன்
தரிக்கிலான் ஆகி-(ஒளிந்து
வளருவதையும்) பொறுக்கமாட்டாதவனாய்
தீங்கு நினைந்த- (இவனைக் கொல்லவேணும் என்னும்) தீச்செயலை நினைத்த
கஞ்சன் – கம்ஸனுடைய
கருத்தை – எண்ணத்தை
பிழைப்பித்து-வீணாக்கி
(கஞ்சன்) வயிற்றில் – அக்கம்ஸனுடைய வயிற்றில்
நெருப்பு என்ன நின்ற-‘நெருப்பு’ என்னும்படி நின்ற
நெடுமாலே-ஸர்வாதிகனே!
உன்னை-உன்னிடத்தில்
அருத்தித்து வந்தோம்-(எங்களுக்கு வேண்டியவற்றை) யாசித்துக்கொண்டு வந்தோம்;
பறை தருதி ஆகில்-எங்களுடைய
விருப்பத்தை நிறைவேற்றுவாயாகில்
திரு தக்க செல்வமும்- பிராட்டியும் ஆசைப்படத்தக்க (உன்) செல்வத்தையும்.
சேவகமும்-வீர்ய குணத்தையும்,
யாம் பாடி- நாங்கள் பாடி,
வருத்தமும் தீர்ந்து—(உன்னைப்பிரிந்து படும்) துக்கமும் நீங்கி,
மகிழ்ந்து- மகிழ்ந்திடுவோம்.