பாசுரம்:
மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலி னிலையா யருளேலோ ரெம்பாவாய்.
பதவுரை:
மாலே-(அடியாரிடத்தில்) அன்புடையவனே!
மணி வண்ணா-நீலரத்னம்போன்ற வடிவையுடையவனே!
ஆலின் இலையாய்-(ப்ரளயகாலத்தில்) ஆலந்தளிரில் கண்வளர்ந்தவனே!
மார்கழி நீராடுவான்-மார்கழி நீராட்டத்திற்காக
மேலையார்-முன்னோர்கள்
செய்வனகள்-செய்யும் கிரியைகளுக்கு
வேண்டுவன-வேண்டும் உபகரணங்களை
கேட்டியேல் -கேட்டாயாகில் (அவற்றைச் சொல்லுகிறோம்;)
ஞாலத்தை எல்லாம்-பூமிமுழுவதும்
நடுங்க-நடுங்கும்படி
முரல்வன-ஒலிக்கக்கூடிய
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே-பால்போன்ற நிறமுடையதான உன்னுடைய ஸ்ரீபாஞ்சஜந்யம்போன்ற
சங்கங்கள் – சங்கங்களையும்
போய் பாடு உடையன-மிகவும் இடமுடையனவாய்
சால பெரு-மிகவும் பெரியனவான
பறை-பறைகளையும்
பல்லாண்டு இசைப்பார்-
திருப்பல்லாண்டு பாடுமவர்களையும்
கோலம் விளக்கு-மங்கள தீபங்களையும்
கொடி-த்வஜங்களையும்
விதானம்-மேற்கட்டிகளையும்
அருள்—அளித்தருள வேண்டும்