பாசுரம்:
கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத் துன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா வுன்றன்னோ
டுறவேல் நமக்கிங் கொழிக்க வொழியா(து)
அறியாத பிள்ளைகளோ மன்பினாலுன் றன்னைச்
சிறுபே ரழைத்தனவுஞ் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.
பதவுரை:
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா—ஒரு குறையும் இல்லாதவனான கோவிந்தனே!
யாம் -நாங்கள்
கறவைகள் பின் சென்று-பசுக்களின் பின்னே போய்
கானம் சேர்ந்து-காடு சேர்ந்து
உண்போம்-உண்டு திரிவோம்
அறிவு ஒன்றும் இல்லாத-சிறிதும் அறிவற்ற
ஆய்க்குலத்து-இடைக் குலத்தில்
உன் தன்னை-உன்னை
பிறவி பெறும் தனை புண்ணியம்
உடையோம்-பிறக்கப் பெறுவதற்குத்தக்க புண்ணியமுடையவர்களாய் இராநின்றோம்
இறைவா-எம்பிரானே!
உன் தன்னோடு உறவு-உன்னோடு (எங்களுக்குள்ள)உறவானது
இங்கு நமக்கு ஒழிக்க ஒழியாது—இங்கு உன்னாலும் எங்களாலும்
ஒழிக்க ஒழியமாட்டாது
அறியாத பிள்ளைகளோம்-(உலகவழக்கொன்றும்) அறியாத சிறுபெண்களானநாங்கள்
உன்தன்னை- உன்னை
அன்பினால் – பிரீதியினாலே
சிறு பேர் அழைத்தனவும் – சிறிய பேராலே அழைத்ததைக் குறித்தும்
நீ -(ஆச்ரிதவத்ஸலனான) நீ
சீறி அருளாதே-கோபித்தருளாமல்
பறைதாராய்-(நாங்கள் விரும்பும்) ப்ரயோஜனத்தைத் தரவேணும்