ஸ்வாமி மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணிநுண் சிறுத்தாம்பு
தனியன் – (ஸ்வாமி நாதமுனிகள் அருளிச்செய்தது):
அவிதித விஷயாந்தரஸ் ஸடாரே: உபநிஷதாம் உபகாந மாத்ரபோக:
அபிச குணவஸாத் ததேக ஸேஷி மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து.
அவிதித விஷயாந்தரஸ் – நம்மாழ்வாரைத்தவிர மற்ற எதையும் அறியாதவராக
ஸடாரே: – ஆழ்வாருடைய ஈரச்சொற்களான
உபநிஷதாம் – திருவாய்மொழியையை
உபகாந மாத்ரபோக: – நித்யம் அனுபவிப்பதே தனக்கு எல்லாம் என்று உடையவரும்
அபிச – பெருமளவு (அளவின்றி)
குணவஸாத் – ஆழ்வாருடைய கருணை எனும் குணத்தினால்
ததேக – அவருக்கே
ஸேஷி – தன்னை அடிமையாக்கிக்கொண்டிருப்பவருமாகிய
மதுரகவிர் – ஸ்வாமி மதுரகவியாழ்வாரை
(மம) ஹ்ருதயே – என் இதயத்தில்
மமாவிரஸ்து – எழுந்தருளியிருக்க வேண்டும்.
வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் – ஏறெங்கள்
வாழ்வாமென்றேத்தும் மதுரகவியார் எம்மை
ஆள்வார் அவரே அரண்.
வேறொன்றும் – ஆழ்வாரைத்தவிர மற்ற எதையும்
நானறியேன் – அடியேன் அறிந்திலேன்
வேதம் தமிழ் செய்த – வேதமனைத்தையும் தமிழிலாக்கிய
மாறன் சடகோபன் – எவராலும் கடக்கமுடியாத சடம் எனும் வாயுவை தம் கால்களால் எட்டித்தள்ளி கோபித்து, உலக இயற்க்கையில் இருந்து மாறின மாறனான
வண்குருகூர் ஏறு – வளம் மிக்க குருகூரிலே புலவர்களுக்கெல்லாம் காளையாக வந்தவதரித்த ஸ்வாமி நம்மாழ்வார்
எங்கள் வாழ்வாம் – எங்களுக்கு வாழ்வளிக்க வந்தவர்
என்றேத்தும் – என்று போற்றும்
மதுரகவியார் – மதுரகவி ஆழ்வாரே
எம்மை ஆள்வார் – எம்மை ஆளும் நாதனாவார்
அவரே அரண் – அவரே எம்மை காக்கும் ஸ்வாமியும் ஆவார்.